இமாச்சல் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் நீர் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சல் பிரதேசத்தின் கின்னூரில் உள்ள டிடாங் நீர்மின் நிலையத்தில் இன்று காலை பயங்கர விபத்து ஏற்பட்டது. சுரங்கப்பாதையின் உள்ளே தள்ளுவண்டி நழுவி 45 முதல் 50 டிகிரி சாய்வு பாதையில் இருந்து தவறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து 50-வது பட்டாலியனின் இந்தோ- திபெத்திய எல்லைக் காவல்துறை மற்றும் நிறுவன பணியாளர்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்கள் இமாச்சல பிரதேசம் மற்றும் ஜார்கண்ட்டைச் சேர்ந்த நீர் மின் நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.